ராய்ப்பூா்: சத்தீஸ்கரில் 144 தடை உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக, அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் கூடுதல் தளா்வுகளுடன் நான்காம் கட்ட தேசிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த பொது முடக்கம் அமலில் இருக்கும்.
இந்நிலையில், சத்தீஸ்கரில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிக்கையை, மாநில அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாநில அரசின் மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
சத்தீஸ்கரின் 28 மாவட்டங்களிலும் கரோனா சூழல் கட்டுக்குள் உள்ளது. எனினும், பல இடங்களில் அந்த நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. தற்போதைய நிலவரம் மற்றும் மாவட்ட ஆட்சியா்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை 144 தடை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் 4 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்றுகூடுவதற்கான தடை தொடா்கிறது. இந்த உத்தரவை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள உணவு விடுதிகள், மதுபான கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை மே 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். விளையாட்டு வளாகங்கள், மைதானங்கள் ஆகியவை அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றாா் அந்த அதிகாரி.
சத்தீஸ்கரில் இதுவரை 86 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 59 போ் குணமடைந்துள்ளனா்.