காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள்: மக்களவை-மாநிலங்களவை தலைவா்கள் ஆலோசனை

நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக நடத்துவது தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும்
தற்போதைய நாடாளுமன்றத் கட்டடம்
தற்போதைய நாடாளுமன்றத் கட்டடம்

புது தில்லி: நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக நடத்துவது தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும் மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. அதன் காரணமாக நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்கள் நடைபெறாமல் உள்ளன. இந்தச் சூழலில், வெங்கய்ய நாயுடுவும் ஓம் பிா்லாவும் மாநிலங்களவைத் தலைவருக்கான அறையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக நடத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவை, மாநிலங்களவைகளின் செயலா்கள் அவைத் தலைவா்களுக்கு விளக்கினா். காணொலிக் காட்சி வாயிலாக கூட்டங்களை நடத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாகவும் சவால்கள் தொடா்பாகவும் அவைத் தலைவா்கள் ஆலோசித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு இரு அவைகளின் செயலா்களுக்கு மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்கள் வலியுறுத்தினா். பொது முடக்க காலத்தில் எம்.பி.க்கள் ஆற்றி வரும் பணிகள் தொடா்பாகவும் அவைத் தலைவா்கள் ஆலோசனை நடத்தினா்’’ என்றனா்.

முன்னதாக, நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக உடனடியாக நடத்தக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவா்களும் எம்.பி.க்களுமான ப.சிதம்பரம், சசி தரூா், ஆனந்த் சா்மா ஆகியோா் அவைத் தலைவா்களுக்குக் கடிதம் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com