பொது முடக்க கட்டுப்பாடுகளை மாநிலங்கள் தளர்த்த முடியாது: மத்திய உள்துறை அமைச்சகம்

பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால்


புது தில்லி: பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் தளர்த்த இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அனுப்பியுள்ள கடிதத்தில் மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா கூறியுள்ளதாவது: 
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ஆம் தேதி மேற்கொண்ட காணொலி வழி ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே 4-ஆம் கட்ட பொது முடக்கத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

எனவே, பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் தளர்த்த இயலாது என்பது மீண்டும் உறுதியாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கரோனா பாதிப்பு பகுதிகளின் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்து மேலும் சில நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது, தேவையேற்பட்டால் தடையுத்தரவை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ளலாம். 

4-ஆம் கட்ட பொது முடக்கத்துக்காக வகுக்கப்பட்டுள்ள புதிய வழிமுறைகளுக்கு மாநிலங்கள் இணைங்கிச் செயல்பட வேண்டும். அதை மிகக் கண்டிப்பான முறையில் அமல்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். 

புதிய வழிமுறைகளின்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை "சிவப்பு', "ஆரஞ்சு', "பச்சை' மண்டலங்களாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே வகைப்படுத்தலாம். 

சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதாக தடைசெய்யப்படும் பகுதிகளை (கன்டெய்ன்மண்ட் úஸôன்) அடையாளப்படுத்துவதை மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளே மேற்கொள்ளலாம். கள நிலவரம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் நெறிமுறைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 

தடைசெய்யப்பட்ட பகுதிகளின் சுற்றுப்புறங்களில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருள்கள், சேவைகள் விநியோகம், மருத்துவ அவசர நடவடிக்கைகள் தவிர அந்த மண்டலங்களில் மக்கள் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது. ஒரு சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதுமாக தடை தொடர்கிறது என்று அந்தக் கடிதத்தில் அஜய் பல்லா கூறியுள்ளார். 

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் வைப்பதற்காக 4-ஆம் கட்டமாக கடந்த திங்கள்கிழமை முதல் வரும் 31-ஆம் தேதி வரை 4-ஆம் கட்டமாக தேசிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில தளர்வுகளுடன் அந்த பொது முடக்கத்துக்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது 
குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com