கொல்கத்தா: வெளி மாநிலங்களில் உள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக 225 ரயில்களை இயக்குமாறு ரயில்வேயிடம் முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது முடக்கத்தில் சில தளர்வுகளை திங்கள்கிழமை அறிவித்த அவர் மேலும் கூறியதாவது:
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வரும் வகையில் ஏற்கெனவே மாநில அரசு ரயில்வேயிடம் 105 ரயில்களை இயக்குமாறு கோரியிருந்தது. இதுதவிர மேலும் 120 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வேயிடம், மாநில அரசு கோரிக்கை விடுக்கும்.
மத்திய அரசு அறிவித்துள்ளபடி இரவு நேர ஊரடங்கு உத்தரவை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம். பொது முடக்க உத்தரவு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதேசமயம் தெருவோர வியாபாரிகள், வரவேற்பு மற்றும் பார்லர் உரிமையாளர்கள் மே 27-ஆம் தேதி முதல் மீண்டும் கடைகளை திறக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பொது முடக்க காலத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மாட்டோம். ஏனெனில் ஏற்கெனவே மக்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். ஆனால், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.