அரசியலுக்கான நேரமல்ல, பேருந்துகளை இயக்க அனுமதி தாருங்கள்: பிரியங்கா காந்தி
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளுக்கு அனுமதி தாருங்கள் என கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக காங்கிரஸ் கட்சி 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைவதற்கான அனுமதிக்காக அவை மாநில எல்லையில் காத்திருக்கின்றன. இந்த நிலையில், பிரியங்கா காந்தி சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையில் உரையாற்றினார்.
அப்போது, "நாம் நமது பொறுப்புகளை உணர வேண்டும். தங்களது சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் இந்தியர்கள் மட்டுமல்ல. அவர்கள் இந்தியாவின் முதுகெலும்பு. அவர்களது ரத்தத்திலும், வியர்வையிலும்தான் இந்த நாடு இயங்குகிறது. அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் மக்களுக்கு உதவ வேண்டும்.
பேருந்துகள் தயாராகி மாலை 4 மணியுடன் 24 மணி நேரம் ஆகிறது. 4 மணி வரை பேருந்துகள் மாநில எல்லைகளில் இருக்கும். அதைப் பயன்படுத்த வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு அனுமதி தாருங்கள். இல்லையெனில் அவை திரும்பப் பெறப்படும். பேருந்துகளில் பாஜகவின் கொடி, ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்தப் பேருந்துகளை நீங்கள்தான் ஏற்பாடு செய்தீர்கள் என்று சொல்ல விரும்பினாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் பேருந்துகள் இயங்க அனுமதியுங்கள்" என்றார் பிரியங்கா.