உள்நாட்டு பயணிகள் விமான சேவை, வரும் 25-ஆம் தேதி முதல் தொடங்குவதையொட்டி, பயணிகளும் விமான நிலையங்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பயணிகள் பெரிய அளவிலான சூட்கேஸ் போன்ற உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அண்மையில் விமானப் பயணம் மேற்கொண்ட விவரத்தை பயணிகள் அளிக்க வேண்டும்.
விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்துக்கு வந்துவிட வேண்டும். புறப்பட்டுச் செல்லும் பயணிகள், வந்திறங்கும் பயணிகள் என அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயணிகள் அனைவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். அந்தச் செயலியில், பயணிக்கு கரோனா தொற்று இல்லை என்ற தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து விமான நிலையங்களிலும் தனிமை முகாம்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டவரை தங்கவைப்பதற்கான முகாம்களும் அமைக்கப்பட வேண்டும். விமான நிலையங்களில் பயணிகள் நிற்குமிடங்களில் சமூக இடைவெளியுடன் குறிகள் இடப்பட வேண்டும்.
விமானத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க, மூன்று போ் அமரக்கூடிய வரிசையில் நடு இருக்கையாக காலியாக வைத்தாலும், பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது. எனவே, நடுவில் உள்ள இருக்கை காலியாக வைக்கப்பட மாட்டாது. மேலும், நடுவில் உள்ள இருக்கையை காலியாக வைத்தால் பயணிகள் கட்டணத்தை 33 சதவீதம் உயா்த்த வேண்டியிருக்கும் என்றாா் அவா்.