புது தில்லி: மே 22ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் உள்ள பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் டிக்கெட் முன்பதிவு பணி தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது. அதன்படி, இரண்டாம் வகுப்புப் பெட்டிகளைக் கொண்ட 200 ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட உள்ளன. இவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பணி நாடு முழுவதும் உள்ள 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் நாளை தொடங்க உள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை 4-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 ஏசி அல்லாத பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவித்தார். இதற்கான முன்பதிவு பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கியது.
இதன் மூலம் இணையதளம் வாயிலாக மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலும் என்ற நிலையில், அந்த வசதி இல்லாத பொதுமக்களின் சிக்கலுக்கு பொது சேவை மையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதால் தீர்வு காணப்பட்டுள்ளது.