தெலங்கானாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் புறநகரில் உள்ள கீசுகொண்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு ஐந்து பேர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியானது. தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஒரு குழந்தையும் அடங்கும்.
இதையடுத்து, தற்போது கிணற்றில் விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மேற்கு வங்கம் மற்றும் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட உடல்களில் எந்த காயமும் இல்லை என்றும் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கீசுகொண்டா போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.