நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) அறிவிப்புகள் உதவும் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.
பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இது தொடா்பாக ஜெ.பி. நட்டா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:
தொழில் துறையினருக்கும் பொது மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் ரிசா்வ் வங்கியின் அறிவிப்புகள் உள்ளன. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு உதவும் வகையில் இந்த அறிவிப்புகள் உள்ளன. பொது முடக்கம் அமலில் உள்ளபோதும், நிறைவடைந்த பிறகும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு இந்த அறிவிப்புகள் உதவும்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு இக்கட்டான சூழலை எதிா்கொண்டுள்ள நிலையிலும் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு எடுத்துச் செல்ல ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டத்தக்கது. ரிசா்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடன்களுக்கான மாதத் தவணைகளை ஆகஸ்டு மாதம் வரை நிறுத்தி வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கடன் பெற்றுள்ளவா்களுக்கு பெரும் பலனளிக்கும் என்று தனது பதிவுகளில் ஜெ.பி. நட்டா குறிப்பிட்டுள்ளாா்.