உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தலைவர் ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர். அதனடிப்படையில், நடப்பு ஆண்டில் நிர்வாகக் குழுத் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இதன் தலைவராக இரு தினங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள 194 நாடுகள் இதற்கு முன்னதாக ஒப்புதல் அளித்துள்ளன.
இந்நிலையில், காணொலி வாயிலாக அவர் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, ஹர்ஷ வர்தன் 34 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவுக்கு அடுத்த ஓராண்டுக்குத் தலைவராக இருப்பார். உலக சுகாதார நிறுவனத்தின் முக்கியமான கொள்கைகள் குறித்து முடிவெடுப்பதில் அவர் முக்கியப் பங்காற்றுவார். ஆண்டுக்கு இருமுறை கூடும் கூட்டத்துக்கு தலைமை வகிப்பார்.