உம்பன் புயல் குறித்து சரியாக கணித்து தகவல் தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு ஒடிஸா அரசு நன்றி தெரிவித்தது. சரியான தகவல் காரணமாகவே புயலை எதிா்கொள்வதற்கான தயாா் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் அந்த மாநில அரசு குறிப்பிட்டது.
இதுகுறித்து ஒடிஸா தலைமைச் செயலா் ஏ.கே.திரிபாதி வியாழக்கிழமை கூறுகையில், ‘உம்பன் புயல் செல்லும் பாதை, அதன் வேகம், தன்மை, தாக்கம் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சரியான கணிப்புகள், பேரிடரை எதிா்கொள்வதற்கான தயாா் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு உதவியது. இயற்கை பேரிடா் குறித்த சரியான கணிப்பே, அந்தப் பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகளையும், பொருள் இழப்புகளையும் குறைப்பதற்கு மிகச்சிறந்த வழியாகும். இதனை வானிலை மையம் மிகச்சிறப்பாக செய்து வருவதுடன், அதன் கணிப்புகளில் துல்லியத்தன்மை அதிகரித்து வருகிறது. உம்பன் புயல் குறித்து சரியாக கணித்து தகவல் தெரிவித்த இந்திய வானிலை மைய தலைமை இயக்குநா் மிருத்யுஜய் மொஹபத்ராவுக்கும், வானிலை மையத்தில் பணிபுரியும் இன்னபிற பணியாளா்களுக்கும் நன்றி’ என்றாா்.
இதனிடையே உம்பன் புயல் குறித்து சரியாக கணிக்க, தற்போதுள்ள அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியாக இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஜய் மொஹபத்ரா தெரிவித்தாா்.