உம்பன் புயல் பாதித்த மேற்கு வங்க மாநிலத்தை வான்வழியில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க மாநில அரசுக்கு உடனடியாக புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு தரப்பில் ரூ.1,000 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
வங்கக் கடலில் உருவாகி புதன்கிழமை கரையைக் கடந்து மேற்கு வங்க மாநிலத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியது உம்பன் புயல்.
மாநிலம் இதுவரைக் காணாத அளவுக்கு பேரழிவைச் சந்தித்திருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். புயல் சேதங்களை நேரில் பார்வையிட வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி இன்று நேரில் வந்து வான் வழியாக புயல் சேதங்களை பார்வையிட்டார். அப்போது அவருடன் மம்தா பானர்ஜியும் இருந்தார்.
அதன்பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களை விரிவாக ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் வந்து ஆய்வு செய்து சேதங்களை மதிப்பிடும். மாநிலத்தில் கட்டமைப்புகளை சீர் செய்ய அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவும்.
மேற்கு வங்க மாநிலத்தில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு தரப்பில் ரூ.1,000 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு தரப்பில் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.