மகாராஷ்டிரத்தில் கரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது.
இதில், மகாராஷ்டிரத்தில் கரோனா பரவலைத் தடுக்க முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. மேலும், ஆளும் அரசுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதில் பேசிய தேவேந்திர ஃபட்னவீஸ், 'இந்த எதிர்ப்பு அரசியல் செய்வதற்காக அல்ல. இந்த எதிர்ப்பின் மூலமாக செயலற்று கிடக்கும் அரசாங்கத்தை தட்டி எழுப்ப வேண்டும். இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 30% மகாராஷ்டிரத்தில் உள்ளது மிகவும் மோசமானது. அரசின் மீட்டது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
கரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அரசு இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது' என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் தற்போது 41,642 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,454 பேர் உயிரிழந்துள்ளனர்.