கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார், உத்தரகண்ட், அசாம் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் இன்று காலை 9 மணி நிலவரப்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,542-ஐ எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் நாகூர் (17), கோட்டா (10), ஜுன்ஜுனு (6), ஜெய்ப்பூர் (5) மற்றும் ஜலவர் (4) ஆகிய இடங்களிலிருந்து அதிகபட்ச வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், ஒருவர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 155 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிகார்
பிகார் மாநிலத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,166 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பாதித்து 1,526 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 629 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 58,905 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அசாம்
அசாம் மாநிலத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 266 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 266 பேரில் 54 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 205 பேர் சிகிச்சையில் உள்ளனர். நான்கு பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
உத்தரகண்ட்
உத்தரகண்ட்டில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 153 ஆகவும், 56 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.