இம்பால்: நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும், தவறினால் நிச்சயம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
நாட்டில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில், வெளிநாட்டிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
நெறிமுறையை மீறியவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மணிப்பூருக்குத் திரும்பும் தொழிலாளர்கள் கரோனா வைரஸ் எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நோய் பரவுவதைத் தடுப்பது எங்கள் முதன்மை பணியாகும் என்றார். கரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் பீதியடைய வேண்டாம், நிலைமையைக் கையாள அரசாங்கம் தயாராக உள்ளது.
அரசு நடத்தும் ரிம்ஸ் மற்றும் ஜே.என்.ஐ.எம்.எஸ் மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களில் நாளொன்றுக்கு 200-300 மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதாகவும், தினமும் 700-800 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.