ராஜஸ்தானை சோ்ந்தவா்கள் மறைந்த தங்கள் குடும்ப உறுப்பினா்களின் அஸ்தியை, உத்தரகண்டின் ஹரித்வாா் மற்றும் அந்த மாநிலத்தின் இதர புனித தலங்களில் ஓடும் நதிகளில் கரைப்பதற்கு ராஜஸ்தான் மாநில அரசு சாா்பில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதற்காக உத்தரகண்ட் அரசின் அனுமதி பெற்று, கட்டணமில்லா சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்த அறிவிப்பை ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக ராஜஸ்தான் கூடுதல் தலைமைச் செயலா் சுபோத் அகா்வால் கூறுகையில், ‘உத்தரகண்டின் ஹரித்வாா் மற்றும் அந்த மாநிலத்தில் உள்ள இதர புனித தலங்களில் அஸ்தியை கரைக்க 4 முதல் 5 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அவற்றில் ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 2 அல்லது 3 உறுப்பினா்கள் கட்டணமின்றி பயணிக்கலாம். இதேபோல் உத்தர பிரதேசத்தில் உள்ள புனித தலங்களிலும் அஸ்தி கரைப்புக்காக அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.
நாடு தழுவிய பொது முடக்கத்தால் மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. இதனால் ராஜஸ்தான் அரசு அஸ்தி கரைப்புக்கு கட்டணமில்லா பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.