2 மாதங்களுக்குப் பின் ஆந்திரம் வருகிறார் சந்திரபாபு நாயுடு
திருப்பதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத கால இடைவெளிக்குப் பின் ஆந்திரத்துக்கு நாளை(திங்கள்கிழமை) வருகை தர உள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மார்ச் 20 ஆம் தேதி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திற்குச் சென்றார். அதற்குப்பின் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர் கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள அவர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
தற்போது பொது முடக்கத்தில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால், அவர் தெலங்கானாவிலிருந்து ஆந்திரத்துக்கு வர இரு மாநிலங்களிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்தார். தெலுங்கானா மாநிலம் உடனடியாக அனுமதி வழங்கிய நிலையில் ஆந்திர மாநிலம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் அவர் திங்கள்கிழமை காலை ஐதராபாத்திலிருந்து விஜயவாடாவிற்கு புறப்பட உள்ளார். 2 மாத கால இடைவெளிக்குப் பின் ஆந்திரத்துக்கு சந்திரபாபு நாயுடு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.