வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசியதாவது:
"இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மற்ற வளர்ந்த நாடுகள், இந்த முடிவை எடுப்பதற்கு பல நாள்களை வீணடித்தனர். சில நாடுகளில் நிலைமை கையைவிட்டு மீறிய பிறகு, ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. நிறைய இடங்களில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
ஊரடங்குக்கு முன்பு இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் 3.4 நாள்களாக இருந்தன. இன்றைக்கு இரட்டிப்பாகும் விகிதம் 13 நாள்களாக உள்ளன. ஊரடங்கும் அதன் வழிகாட்டுதல்களும் இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன."