லக்னௌ: எய்ட்ஸ் பாதித்து சிகிச்சையில் இருந்து வரும் நபர், கரோனா தொற்றுக்கு உள்ளாகி வெறும் 6 நாள்களில் குணமடைந்துள்ளது மருத்துவத் துறையினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எய்ட்ஸ் நோயாளியான 34 வயது நபர், கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தில்லியில் இருந்து கோண்டா என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதும், சமீபத்தில் எடுத்த கரோனா பரிசோதனையில் தனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
லக்னௌவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றதன் பயனாக வெறும் 6 நாள்களில் அவர் நலம் அடைந்தார்.
இது பற்றி கேஜிஎம்யு துணை வேந்தரும், பேராசிரியருமான எம்எல்பி பட் கூறுகையில், எங்கள் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக எய்ட்ஸ் மற்றும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். ஆனால், இவர் வெறும் ஆறு நாள்களிலேயே குணமடைந்திருப்பது மருத்துவத் துறையினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலையில் காயம் ஏற்பட்டதால் சில சமயங்களில் அவருக்கு மன ரீதியான பிரச்னைகளும் ஏற்பட்டது. ஆனால், தற்போது அவர் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 14 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.