மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவால் அதிகபட்சமாக ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21 நாள் தேசிய பொது முடக்கத்தை கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். மாா்ச் 25-ஆம் தேதி தொடங்கிய இந்த பொது முடக்கம், ஏப்ரல் 14-ஆம் தேதி நிறைவடையவிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராததைத் தொடா்ந்து, மே 3-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து மே 17-ஆம் தேதி வரையும், பின்னா் மே 31-ஆம் தேதி வரையும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. எனினும், நாட்டின் பொருளாதாரம் சாா்ந்த நடவடிக்கைகள் மேம்பட வேண்டும் என்பதால் பல்வேறு தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை முழுமையாக பொது முடக்கம் அமலில் உள்ளது.
எனினும், கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, தேசிய பொது முடக்கத்தை மே 31-ஆம் தேதிக்குப் பிறகு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,65,799 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 4,706 ஆகவும் உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. இங்கு பாதிப்பு எண்ணிக்கையோடு பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதன்படி மாநிலத்தில் இன்று மட்டும் கரோனாவால் அதிகபட்சமாக ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 2,098ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 2,682 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62,228ஆக உயர்ந்துள்ளது.