சத்தீஸ்கர் மாநிலத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டு நிலவாயா பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடர்புள்ளதாக கருதப்படும் 4 பேர் உள்பட 10 நக்ஸல்கள் செவ்வாய்க்கிழமை சரணடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், மலாங்கிர் பகுதியில் இயங்கி வந்த நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்த இந்த 10 பேரும் காவல் துறை, சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தனர்.
சரணடைந்த நக்ஸல்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என உள்ளூர் காவல்துறையினர் மேற்கொண்ட பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டதால் அவர்கள் சரணடைந்ததாக தந்தேவாடா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
மாவோயிச சிந்தாந்தத்தால் ஏமாற்றமடைந்ததாலும், மறுவாழ்வு பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டதாலும் இந்த 10 நக்ஸல்களும் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களில் 5 நக்ஸல்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூன் மாதத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரம் காரணமாக இதுவரை மாவட்டத்தில் 187 நக்ஸல்கள் சரண் அடைந்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு அக். 30-ஆம் தேதி நிலவாயா கிராமம் அருகே நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார், தூர்தர்ஷன் செய்தி ஒளிப்பதிவாளர் ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தேடப்பட்டு வந்த நக்ஸல் பிரிவின் துணைத்தளபதி மாத்வி ஆய்தா (20), பீமா கோரம் (22), முக்கா மத்வி (26), நரேஷ் மார்க்கம் )23) ஆகியோர் குறித்து தகவல் அளிப்போருக்கு மொத்தம் ரூ.10 லட்சம் வரை வெகுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தேடப்பட்டு வந்த இந்த நால்வர் உள்பட 10 நக்ஸல்களும் சரண் அடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது பல முறை வெடிகுண்டு தாக்குதலிலும், துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டவர்களாவர்.
இவர்களுக்கு அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின்படி உடனடி உதவியாக ரூ. 10,000 வீதம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.