கோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கப்தங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அரியநகர் பகுதியில் வீட்டின் கீழ்தளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுக் கிடங்கி இயங்கி வந்துள்ளது.
இதனிடையே இன்று (புதன்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுக் கிடங்கிற்கு மேல்புறத்தில் உள்ள இல்லத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்து தீ விபத்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.
உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதில் வீட்டில் தங்கியிருந்த 35 வயதுடைய நபர் உள்பட அவரது தாயார் மற்றும் 14 வயது சிறுமி உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தால் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கப்தங்கஞ்ச் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.