அர்னாப் கைதுக்கும், மாநில அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிவசேனை கட்சி எம்.பி சஞ்சய் ரௌத் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், தனியார் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்காலிகமாக அப்போது முடிக்கப்பட்ட வழக்கு தற்போது மகாராஷ்டிர அரசின் உத்தரவின் பேரில், சிபிஐ மீண்டும் வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அர்னாப் கைது மகாராஷ்டிர அரசின் திட்டமிட்ட செயல் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சிவசேனை கட்சியின் எம்.பி சஞ்சய் ரௌத் கூறுகையில், 'அர்னாப் கைதுக்கும் மாநில அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மகாராஷ்டிரத்தில் சரியான முறையில் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் காவல்துறை யாரையும் எதிர்த்து நடவடிக்கை எடுக்க முடியும். மாநில அரசு எந்தவித பழிவாங்கும் வகையிலும் ஈடுபடவில்லை. சட்டப்படியே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'இது ஊடகங்களுக்கு கருப்பு நாள் அல்ல. ஊடகவியலாளர்களும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஊடகங்கள் விசாரணை நிறுவனமோ அல்லது நீதிமன்றமோ அல்ல. நாம் அனைவரும் பத்திரிகையாளர்கள். யார் தவறு செய்தாலும் அவர்கள் காவல்துறையால் தண்டிக்கப்படுவார்கள்' என்றும் கூறினார்.