தில்லியில் புதிய நாடாளுமன்றம், மத்திய தலைமைச் செயலகம் ஆகிய கட்டடங்கள் அமையும் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தால், பல அமைச்சகங்களின் வாடகை செலவு மிச்சமாகும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தில்லி லுட்யன்ஸ் பகுதியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை 3 கி.மீ. தொலைவுக்கு சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அந்தப் பகுதியில், நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களின் அலுவலகம் ஆகிய இடம்பெறவுள்ளன. இந்த திட்டத்தின் வடிவமைப்பு ஒப்பந்தத்தை குஜராத்தைச் சோ்ந்த ஹெச்.சி.பி. டிசைன்ஸ் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது.
இதனிடையே, இந்த திட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா முன்வைத்த வாதம்:
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளாகியும் மத்திய தலைமைச் செயலகத்துக்கு தனி கட்டடம் இல்லை. பல்வேறு அமைச்சகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. வாடகை செலவாக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டு வருகிறது. அலுவல் ரீதியாக ஒரு அமைச்சகத்தில் இருந்து மற்றோா் அமைச்சகத்துக்கு வாகனங்களில் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, அமைச்சகங்களுக்கு சொந்த கட்டடம் இருந்தால், வாடகைக்கு செலவிடும் பணம் மிச்சமாகும்; அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு அதிகரிக்கும்; போக்குவரத்து நெரிசல் குறையும்.
தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் இடப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. இதை பல்வேறு தருணங்களில் பலா் சுட்டிக்காட்டியுள்ளனா். மேலும், அந்த கட்டடம், நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டதல்ல. எனவே, சுமாா் 1,200 எம்.பி.க்கள் வரை அமரும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டமும் அவசியத் தேவையாகவுள்ளது என்று துஷாா் மேத்தா வாதிட்டாா். அடுத்த விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.