மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஐ, விசாரணை மேற்கொள்ளக்கூடாது என கேரள அமைச்சரவையில் புதன்கிழமை முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இடது முன்னணி தலைமையில் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சி செய்துவரும் கேரள மாநிலத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பொது ஒப்புதலை ரத்து செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் காலத்தில் மாநிலத்திற்குள் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்ய சிபிஐ கேரள அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன்னதாக கடந்த திங்கள்கிழமை விசாரணை ஆணையங்கள் தங்களது அதிகார எல்லையை மீறி செயல்படுவதாக மாநில அரசின் சார்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கேரளமும் சிபிஐக்கான பொதுஒப்புதலை திரும்பப்பெற்ற மாநிலங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.