நாட்டில் மூத்த குடிமக்களுக்கென விரைவில் ஒரு தேசிய உதவி எண் அறிவிக்கப்படும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு இது ஆதரவு வழங்குவதுடன், அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இணைக்கும்.
தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் இதுகுறித்த நெறிமுறைகளை மாநிலங்களுடன் இணைந்து உருவாக்கி வருகிறது.
"பெரும்பாலான மாநிலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இன்னும் சிலரின் பதில்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்தத் திட்டம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம்" என்று தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த செயல் திட்டம், மூத்த குடிமக்களுக்கு ஆதரவை வழங்குவதோடு, வயதானோர் சமூகத்தில் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளின் மூலம் தீர்வு கண்டு, அவர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.