கேரளம், மேற்கு வங்கம், மணிப்பூர் உள்பட 4 மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நாட்டில் தினசரி கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கான சராசரியும் அந்நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்கான சராசரியும் கடந்த 7 வாரங்களாகக் குறைந்து வருகிறது. செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாட்டில் சராசரி கரோனா பாதிப்பு 90,346-ஆக இருந்தது. இது அக்டோபர் 28-ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரையிலான காலத்தில் 45,884-ஆகக் குறைந்தது.
அதே காலகட்டத்தில், சராசரி கரோனா உயிரிழப்பு 1,165-லிருந்து 513-ஆகக் குறைந்தது. கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி வரை கேரளம், மணிப்பூர், மேற்கு வங்கம், தில்லி ஆகியவற்றில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது. அதே காலகட்டத்தில் தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தர பிரதேசம் ஆகியவற்றில்
கரோனா பரவல் பெருமளவில் குறைந்தது என்றார் ராஜேஷ் பூஷண்.
நீதி ஆயோகின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""கரோனா நோய்த்தொற்று குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமையடையவில்லை. எனவே, அந்நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் மக்கள் அலட்சியம் காட்டக் கூடாது.
கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் உடனடியாகப் பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, அந்நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை'' என்றார்.