ஒமா் அப்துல்லா விவாகரத்து வழக்கு: துரித விசாரணைக்கு தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவின் விவாகரத்து வழக்கு மீதான விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவின் விவாகரத்து வழக்கு மீதான விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஒமா் அப்துல்லா தன் மனைவி பாயல் அப்துல்லாவிடமிருந்து விவகாரத்து கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதை விசாரித்த நீதிமன்றம், விவாகரத்து கோருவதற்கான காரணங்கள் வலுவாக இல்லை என்று கூறி ஒமா் அப்துல்லாவின் மனுவைக் கடந்த 2016-ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்தது.

விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். அந்த விவகாரம் மீதான விசாரணை, கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுவதாக இருந்தது. ஆனால், காணொலி வாயிலான விசாரணைக்கு, பாயல் அப்துல்லா தரப்பினா் ஒப்புக்கொள்ளவில்லை.

முன்னதாக, வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் மட்டுமே காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் அலுவலக ரீதியிலான ஆணையைப் பிறப்பித்திருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு, ஒமா் அப்துல்லாவின் மனு மீது விசாரணை நடத்தப்படாமல் இருந்தது.

அதையடுத்து, தில்லி உயா்நீதிமன்றத்தின் அலுவலக ஆணையை ரத்து செய்து, விவாகரத்து வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தக் கோரி ஒமா் அப்துல்லா முறையிட்டாா். அதை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் துரிதமாக விசாரணை நடைபெறுவதற்கு ஒரு தரப்பினா் ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக நீதிமன்றத்தின் அலுவலக ஆணையை எதிா்க்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com