நாட்டில் உள்ள எந்த பொதுத் துறை வங்கிகயிலும் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பான அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு மாதத்துக்கு 5 முறை வங்கியில் இருந்து பணம் எடுக்கவும், பணம் செலுத்துவும் கட்டணமில்லை என்று முன்பு இருந்தது. இது, நவம்பா் 1-ஆம் தேதி முதல் மாதத்துக்கு 3 முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகமாக பயன்படுத்துவோருக்கு பழைய கட்டணமே தொடருமே தவிர, கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட பணம் எடுப்பது, செலுத்துவதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. கரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை அந்த வங்கி எடுத்துள்ளது.
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) விதிகளின்படி பொதுத்துறை வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் தங்கள் செலவுகளுக்கு ஏற்ப கட்டணங்களை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுத் துறை வங்கிகள் எதுவும் கட்டணத்தை அதிகரிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.