ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியின் கைது அவசரநிலை பிரகடனத்தை நினைவுபடுத்துவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விமர்சித்துள்ளார்.
கட்டட உட்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், தனியார் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
கட்டட உற்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக கடந்த 2019-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த வழக்கை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் மும்பை காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடும் மகாராஷ்டிர அரசின் செயலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். பத்திரிகையாளருக்கு மதிப்பு கொடுக்கும் முறை இதுவல்ல. பத்திரிகையாளரை மகாராஷ்டிர அரசு கையாண்ட முறை அவசரநிலையை நினைவூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.