கரோனா பரவலில் தில்லியில் மூன்றாவது அலை வீசுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும், அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தில்லியில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பரவலில் தில்லியில் மூன்றாவது அலை வீசுவதாகக் கருதலாம். தொற்று பரவும் விகிதத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கரோனாவை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
தில்லி அரசு சார்பில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று கூறினார்.
தில்லியில் நேற்று (செவ்வாய்க் கிழமை) ஒருநாளில் மட்டும் 6,700 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாளில் 5,891 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.