மும்பை: மகாராஷ்டிரத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட சமூக ஆர்வலர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த 30 வயதான தகவல் அறியும் உரிமைச்சட்ட சமூக ஆர்வலர் ஒருவர், தமது உறவினர் வீட்டுப் பெண்ணான 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மல்வானி காவல்துறையினர் சமூக ஆர்வலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், புகாரின் பேரில் சமூக ஆர்வலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் மல்வானி காவல்துறை மூத்த ஆய்வாளர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.