மணிப்பூரில் காலியாக உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றுவரும் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 64.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூரில் முதல்வர் நோங்தோம்பம் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனிடையே மணிப்பூர் காங்கிரஸ் கட்சியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்ததால், அவர்கள் வெற்றி பெற்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த நான்கு தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் காலை 11 மணி நிலவரப்படி 19.14 சதவிகித வாக்குகள் பதிவாகிய நிலையில், பின்னர் வாக்குப்பதிவு வேகமாக நடைபெற்றது.
மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி 64.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.