மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், நிவாரி மாவட்டத்தில் உள்ள கிராமம் பிருத்விப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 5 வயது மகன் பிரகால்த். இச்சிறுவன் கடந்த 4-ஆம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கிருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த தேசிய மற்றும் மாநில் பேரிடர் மீட்புக் குழு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 90 மணிநேர நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு இன்று அதிகாலை 3 மணியளவில் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டான். எனினும், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்த அவர் எந்தவொரு ஆழ்துளைக் கிணற்றையும் திறந்தநிலையில் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.