புது தில்லி: பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சூடானை அமெரிக்கா நீக்கியுள்ளதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த சூடான் தற்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்புக்குரியது.
அதேபோன்று, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இஸ்ரேலுடன் அமெரிக்கா இயல்பான உறவை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளதும் வரவேற்கத்தக்கதே.
ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக காரணமாக இருந்த நெடுநாளைய உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் சூடானின் இடைக்கால அரசு கடந்த மாதம் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படக் கூடியது.
இந்த ஜூபா அமைதி ஒப்பந்தம், சூடானில் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுடன் வளா்ச்சி, அமைதி, பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
சூடான் உடனான இந்தியாவின் உறவு என்பது வரலாற்று சிறப்பு மிக்கது என்பதுடன், தனித்தன்மை வாய்ந்தது. அடிப்படையில் இரு நாட்டு மக்களுக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.