அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.


மும்பை: ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

 மும்பையைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கும் அவரது தாயாரும் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததே இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.

 இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸôர் கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சார்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் தங்களை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக அர்னாப் கோஸ்வாமி தனது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மூவரும் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதால் இடைக்கால ஜாமீனில் தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இதனை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.கார்னிக் ஆகியோர்அடங்கிய அமர்வு, மூவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இடைக்கால மனுவை நாங்கள் தள்ளுபடி செய்திருப்பது, விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் வழக்கமான ஜாமீன் மனு மூலம் நிவாரணம் பெறுவதை பாதிக்காது. மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றத்தை நாடும் உரிமை உள்ளது. ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டால் அது குறித்து விசாரணை நீதிமன்றம் 4 நாள்களில் முடிவு செய்யும் என்று நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com