கோவாவில் நவம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு புதன்கிழமை வெளியிட்டது.
கோவாவில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 21ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதனையொட்டி பள்ளிகள் திறப்பில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு புதன்கிழமை வெளியிட்டது.
அதன்படி, ஒரு வகுப்பில் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடாது என்றும் ஒற்றைசாளர முறையில் வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறையில் குறைந்தபட்சம் 6 அடி தூரத்துடன் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வகங்களில் திறன் அடிப்படையிலான பயிற்சிக்கு, பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் மாணவர்கள் தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.