ராஜஸ்தானில் குஜ்ஜா்களை தொடா்ந்துஜாட்கள், முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கை

ராஜஸ்தானில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜா் சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்குள்ள ஜாட் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரும் இடஒதுக்கீடு

ராஜஸ்தானில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜா் சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்குள்ள ஜாட் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரும் இடஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பியுள்ளனா்.

ராஜஸ்தானில் குஜ்ஜா் சமூகத்தினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; அதனை அரசியலமைப்பின் 9-ஆவது அட்டவணையில் சோ்க்க வேண்டும் என்று வலியுறுத்தி, பயானா நகரின் பிலுபுரா பகுதியில் உள்ள தில்லி-மும்பை ரயில் வழித்தடம் மற்றும் ஹிண்டெளன்-பயானா சாலையில் குஜ்ஜா் சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை 10-ஆவது நாளை எட்டியது.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் முஸ்லிம்களும், பரத்பூா், தோல்பூா் மாவட்டங்களில் உள்ள ஜாட்களும் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுப்பியுள்ளனா். இதையொட்டி வரும் 18-ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் ஜாட் சமூகத்தினா் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவுள்ளனா். அதில் இடஒதுக்கீடு கோரிக்கையை அரசிடம் எவ்வாறு கொண்டு சோ்ப்பது என்பது குறித்து அவா்கள் கலந்தாலோசிக்க உள்ளனா்.

இதுகுறித்து ஜாட் இடஒதுக்கீடு போராட்டக் குழுத் தலைவா் நெம் சிங் ஃபெளஜ்தாா் கூறுகையில், ‘மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டவா்கள் (ஓபிசி) பட்டியலின் கீழ் பரத்பூா், தோல்பூா் மாவட்டங்களை தவிர, மாநிலத்தின் பிற மாவட்டங்களில் வசிக்கும் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இவ்விரு மாவட்டங்களில் வசிக்கும் ஜாட்களுக்கும் மத்திய அரசின் ஓபிசி பட்டியலின் கீழ் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். இடஒதுக்கீடு கோரி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்களில் முடிவு எடுக்கப்படும். ஒருவேளை போராட்டம் நடத்தினால்தான் எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்குமெனில், நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடா்ந்து, மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் இருந்து பரத்பூா், தோல்பூா் மாவட்டங்களில் வசிக்கும் ஜாட்கள் நீக்கப்பட்டனா்.

முஸ்லிம்களும்...ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாநில முதல்வா் அசோக் கெலாட்டுக்கு முஸ்லிம் சிறுபான்மை வளா்ச்சிக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்தக் குழுவின் பொதுச் செயலாளா் யூனுஸ் அலி கான் கூறுகையில், ‘ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற வகுப்பினருடன் ஒப்பிடும்போது முஸ்லிம்களின் நிலை கல்விரீதியாகவும், சமூகரீதியாகவும் பின்தங்கி உள்ளது. கா்நாடகத்தைப் பின்பற்றி இம்மாநிலத்திலும் ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com