புது தில்லி : தங்களது குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பவர்களாக இந்தியப் பெற்றோர் இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் 55 சதவீத பெண்களும், 43 சதவீத ஆண்களும், தங்களது குழந்தைகளின் கல்விக்காகவே பெரும் தொகையை செலவிடுவதாகவும், இந்தியாவில் ஆண்களை விட, அதிகளவிலான பெண்களே குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் டிஜிட்டல் சொத்து மேலாண்மை சேவை அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நகர்ப் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பெற்றோர்களின் அதிக முக்கியத்துவம் கொண்டதாக கல்வியே விளங்குவதாகவும், அவசரத் தேவைக்கு பணம் சேமிப்பது குறுகிய கால லட்சியமாக விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியர்கள் முதல் செலவை குழந்தைகளின் கல்விக்காக (46 சதவீதம்) செலவிடுகிறார்கள். அடுத்ததாக ஓய்வூதியத்துக்காக (43 சதவீதம்), உடல் நலனுக்காக (37 சதவீதம்), வீட்டு உபயோகப் பொருள்களுக்கு (29) என செலவை மேற்கொள்கிறார்கள்.
25 வயது முதல் 55 வயது வரையுடையவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆண்களும் பெண்களும் சம அளவில் பங்கேற்றுள்ளனர்.