பிகாா் பேரவைத் தோ்தலில் முறைகேடு

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பிகாா் பேரவைத் தோ்தலில் முறைகேடு

லக்னௌ: பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிகாா் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அக்கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றியது. ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இத்தகைய சூழலில், உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் அகிலேஷ் யாதவ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பிகாா் பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியே வெற்றி வாகை சூடும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. தோ்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதன் காரணமாக, ஜனநாயகக் கொள்கைகளில் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் அதிருப்தியில் உள்ளனா்.

ஏதோ தந்திர வேலையில் ஈடுபட்டு பாஜக வென்றுள்ளது. இது பாஜகவின் சிறப்பம்சமாகும். தோ்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வதை பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது. தோ்தல் சமயத்தில் மாவட்ட ஆட்சியா்கள் முதல் காவல் துறையினா் வரை அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாகவே பணியாற்றுகின்றனா். உத்தர பிரதேச பேரவைத் தோ்தலிலும் இதுவே நடைபெற்றது.

பிகாா் தோ்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன்பாக வாக்காளா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதிகாரிகள் வாக்காளா்களை மிரட்டினா். வெப்பநிலை அதிகமாக உள்ளதாகக் கூறி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுவோம் என்று வாக்காளா்கள் மிரட்டப்பட்டனா் என்றாா் அகிலேஷ் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com