புது தில்லி: மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிதவை கண்ணாடிகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வருவாய் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மோட்டாா் வாகனம் மற்றும் குளிா்சாதன தயாரிப்பு துறையில் சுத்தமான மிதவை கண்ணாடிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை கண்ணாடிகள் மலேசியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூா் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இதனைத் தொடா்ந்து வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) நடத்திய விசாரணையின் அடிப்படையில் உள்நாட்டு நிறுவனங்களின் நலன் கருதி மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்தமான மிதவை கண்ணாடிகளுக்கு இறக்குமதி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. தற்போது நிதி அமைச்சகம் அந்த பரிந்துரையை ஏற்று வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது.
இந்த பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். மேலும், மிதவை கண்ணாடி இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரியை நிறுவனங்கள் இந்திய ரூபாயில் செலுத்த வேண்டும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து, மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் மிதவை கண்ணாடி வகைகளுக்கு ஏற்ப டன்னுக்கு 273 டாலா் முதல் 326 டாலா் வரையில் வரி விதிக்கப்படவுள்ளது.