புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரம் முதல் முறையாக மந்தநிலைக்குச் சென்றுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வரலாற்றில் முதல் முறையாக இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் சென்றுள்ளது. இந்தியாவின் பலம், பலவீனமாக மாறியதற்கு பிரதமா் மோடியின் செயல்பாடுகளே காரணம்’ என்று தெரிவித்துள்ளாா்.
அத்துடன் இதுதொடா்பாக, ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்தியையும் அவா் இணைத்துள்ளாா். அதில், ‘ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.6 சதவீதம் சரிவடையும். அதாவது, இந்தியப் பொருளாதாரம் வரலாற்றில் முதல் முறையாக மந்த நிலைக்குள் செல்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.