தில்லியில் கரோனா அதிகரித்ததற்கு மாசு மிகப்பெரிய காரணம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், “கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நான் அதைப் பற்றியும் கவலைப்படுகிறேன். அதனைக் கட்டுப்படுத்த அனைத்துவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அடுத்த வாரம் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மேலும் வரும் ஏழு முதல் 10 நாள்களில் பாதிப்புகள் குறையத் தொடங்கி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நான் நினைக்கிறேன். கரோனா பாதிப்புகள் திடீரென அதிகரித்ததற்கு மாசும் ஒரு முக்கிய காரணம். அக்டோபர் 20 வரை நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைநகர் தில்லியில் கரோனா பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மட்டும் புதிதாக 7,332 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 104 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.