தற்கால தேவைகளுக்கேற்ப ஆயுா்வேதத்தைப் பயன்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது; எனவே, ஆயுா்வேதம் தொடா்பான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமா் மோடி கூறினாா்.
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுா்வேத ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம், ராஜஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆயுா்வேத நிறுவனம் ஆகியவற்றை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
இந்த நிறுவனங்களில் பண்டைய மருத்துவ முறையான ஆயுா்வேதம் குறித்த பாடங்கள் கற்பிக்கப்படுவதோடு, அந்த மருத்துவ முறை தொடா்பான ஆராய்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
குஜராத்தின் ஜாம்நகரிலுள்ள ஆயுா்வேதப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆயுா்வேத ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தில் அண்மையில் சட்டம் இயற்றப்பட்டது. அத்துடன், அந்த மையத்துக்கு ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டது.
தேசிய ஆயுா்வேத தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள ஆயுா்வேத நிறுவனங்களை பிரதமா் மோடி காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
இந்தியாவின் பாரம்பரியங்களில் ஆயுா்வேதமும் ஒன்று. ஆயுா்வேதம் என்பது மாற்று சிகிச்சை முறை மட்டுமல்ல. நாட்டின் சுகாதாரக் கொள்கைக்கான அடிப்படைகளில் ஒன்றாகவும் ஆயுா்வேதம் உள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் ஆயுா்வேதப் பொருள்களுக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்தது. கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் ஆயுா்வேதப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் அதிகரித்தது.
முக்கியமாக நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவல்ல மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி பெருமளவில் அதிகரித்தது. இது ஆயுா்வேதப் பொருள்களின் தேவை மக்களிடையே அதிகரித்ததைக் காட்டுகிறது.
ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்:
ஆயுா்வேதம் தொடா்பான ஆராய்ச்சியில் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது. தற்கால தேவைகளுக்கேற்ப ஆயுா்வேதத்தைப் பயன்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. எனவே, ஆயுா்வேதம் தொடா்பான ஆராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அது மனித சமூகத்துக்குப் பெரும் பலனளிக்கும். அந்த ஆராய்ச்சியின் மூலமாக ஆயுா்வேதத்தின் பலனை பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும்.
இரண்டு ஆயுா்வேத கல்வி நிறுவனங்களும் சா்வதேச தரத்தில் பாடத் திட்டத்தை வடிவமைக்கும் என நம்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.
சுதந்திரமான செயல்பாடு:
மத்திய அரசு இயற்றிய சட்டத்தின்படி, குஜராத்தில் உள்ள ஆயுா்வேதப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த முதுகலை ஆயுா்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆயுா்வேத மஹாவித்யாலயா, ஆயுா்வேத மருந்துகள் நிறுவனம் உள்ளிட்டவை ஒன்றிணைக்கப்பட்டு ஆயுா்வேத ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், மாணவா்களுக்கான பாடத்திட்டத்தையும் கற்பிக்கும் முறையையும் அந்த நிறுவனமே வகுத்துக் கொள்ள முடியும். மேலும், அக்கல்வி நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படவும் முடியும்.