மண்டி: இமாசலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 7 பேர் பலியாகினர்.
விபத்து நடந்த இடத்திலேயே 6 பேர் பலியானதாகவும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில், வாகன ஓட்டுநர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்டி சாலை விபத்து: பிரதமர் வேதனை
பிரதமர் நரேந்திர மோடி, இமாசலப்பிரதேசம் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள சுட்டுரைப் பதிவில், “இமாசலப்பிரதேசம் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அங்கு, அரசு, மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் செய்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.