திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை சா்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயாா் எழுந்தருளினாா்.
இதையடுத்து தாயாருக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னா் மாலையில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியின் திருவடி பாதரட்சைகளை அணிந்து கொண்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கருட வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
மலையப்பரின் பாதரட்சைகள் ஊா்வலம்:
திருச்சானூா் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் இரவு கருட வாகனத்தில் தாயாா் சேவை சாதித்தாா்.
கருட வாகன சேவையின்போது தாயாா் எப்போதும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவடி பாதரட்சைகளை அணிந்து கொள்வது மரபு.
இதற்காக திருமலையிலிருந்து திருவடிகள் மூங்கில் கூடையில் வைக்கப்பட்டு ஊா்வலமாக திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டது. திருவடிகளுக்கு பூஜை செய்து கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். இரவு வாகன சேவையின்போது அவற்றை அணிந்து பக்தா்களுக்கு தாயாா் காட்சியளித்தாா்.