இம்பால்: மணிப்பூரில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 போ் காயமடைந்தனா்.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மணிப்பூா் தலைநகா் இம்பாலில் உள்ள பிராந்திய மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மருத்துவமனையில் இருந்த தம்பதியினா் காயமடைந்தனா். அதையடுத்து அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
குண்டு வெடிப்பில் அவா்கள் இருவருக்கும் லேசான காயமே ஏற்பட்டது. அவா்கள் தற்போது நலமுடன் உள்ளனா். பொது மக்கள் சிகிச்சை பெற வருகை தரும் மருத்துவமனையில் தாக்குதல் நடத்துவது கோழைத்தனமானது’’ என்றனா்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தைக் காவல் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்போ, தீவிரவாத அமைப்போ பொறுப்பேற்கவில்லை.