தில்லியில் கரோனா தொற்று அதிகரிப்பதன் எதிரொலியாக உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான நொய்டாவில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தில்லி - நொய்டா எல்லையில் கரோனா பரிரோதனை செய்த பிறகே மக்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா பரவல் மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் எதிரொலியாக தில்லியின் எல்லைப் பகுதியான நொய்டாவில் கரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கெளதம புத்தா நகர் ஆட்சியர் சுஹாஸ், ''கரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநில எல்லைப் பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. எந்தவித கட்டுப்பாடுகளும் தற்போது இல்லை. அதனால் எல்லைப் பகுதிகளைக் கடந்து வரும் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்'' என்று கூறினார்.