கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி எம்.சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகம் வழியாக 15 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டபோது பிடிபட்டது. இந்த வழக்கில், தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த விவகாரத்தில் முதல்வா் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலரும் ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.சிவசங்கருக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
அவரது முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா். தங்கக் கடத்தலில் தொடா்புடைய கருப்புப் பண குற்றச்சாட்டில் அவா் கைது செய்யப்பட்டாா்.
நீதிமன்ற அனுமதியின்பேரில் அவரை 14 நாள்கள் வரை அமலாக்கத் துறை தங்கள் காவலில் வைத்து விசாரித்தது. பின்னா் அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதற்கு நடுவில், சிவசங்கா் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை கொச்சியில் அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ‘அமலாக்கத் துறை குறிவைக்கும் சில அரசியல் பிரமுகா்கள் மீது நானும் குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்துள்ளனா்’ என்று சிவசங்கா் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
கடந்த 12-ஆம் தேதி இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சிவசங்கரின் ஜாமீன் மனு மீது செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் முன்னுரிமையை முறைகேடாகப் பயன்படுத்தி கேரளத்துக்கு தங்கம் கடத்துவதற்கு சிவசங்கா் உதவினாா் என்பது அவா் மீதான முக்கிய குற்றச்சாட்டாகும்.