காரில் பயணிக்கும் மக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
காரினுள் முகக்கவசம் அணிவதால் எந்தவித சிரமமும் இல்லை. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தில்லியில் கரோனா மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''கரோனா பரவி வரும் சூழலில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மக்கள் இந்த விதியினைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் வசூலிக்கும் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து பகுதிகளிலும் அமலாகியுள்ளது.
தொற்றால் பாதிக்கப்படுவோரை கண்டறியும் முறை ஏற்கனவே மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடுகளாக சென்று கரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள 60 சதவிகித கரோனா படுக்கைகள் தில்லி அரசு சார்பில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன'' என்று கூறினார்.